நமக்கு சிறு வயதில் பிடிக்காத பாடம் என்று ஏதேனும் ஒன்று இருக்கும். கணிதம், ஆங்கிலம், அறிவியல், வரலாறு என்று ஏதேனும் ஒன்றை நாம் வெறுத்திருப்போம். நமது மாண்புமிகு தமிழக முதல்வர் கருணாநிதி அனேகமாக சரித்திரங்களை வெறுத்து இருக்கிறார். அதனால்தான் அவற்றை சரியாக படிக்கவில்லை போலும். அல்லது வயதாகி விட்டதால் புத்தி தடுமாறி வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி திரிகின்றாரா என்பதும் தெரியவில்லை.
ஏற்கனவே ராமர் ஒரு குடிகாரர், மது அருந்தினார் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். மது என்றால் சமஸ்கிருததில் தேன் என்று பொருள் என்பதை மறந்து விட்டார் பாவம். ராமர் என்ன இஞ்சினியரா? அவர் எவ்வாறு பாலம் கட்டினார் என்றெல்லாம் சிறு பிள்ளை போல் கேள்விகள் எழுப்பினார். இதெல்லாம் போதாதென்று, துளசி தாசரின் ராமாயணத்தில் ராமன், சீதையின் தமையன் என்று ஒரு குண்டை போட்டார். இவை எல்லாவற்றிற்கும் ஒட்டு மொத்த இந்தியாவே ஆர்ப்பரித்த போது இந்துத் தமிழர்கள் மட்டும் அமைதி காத்தனர். ஏதோ எதுவுமே நடக்காத மாதிரி.
இப்போது மீண்டும் ஒரு தவறான ராமாயண உதாரணம் கொடுத்து பிரச்சனையை மீண்டும் ஆரம்பித்துள்ளார் திரு மு க. நேற்று வண்டலூரில் நடந்த காவல் துறை விழாவில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேட்டு விட்டது என்று எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விக்கு பதில் அளிப்பது போல் ராமாயணத்தை (தவறாக) உதாரணம் காட்டியுள்ளார் அவர். அவர் முதலில் மகாபாராதத்தை எடுத்துக்க் கொண்டு, தர்மர் ஒரு சிறந்த அரசர். அவர் ஆட்சியில் நீதி நிலை பெற்றது ஆயினும் தவறுகள் நடந்து கொண்டுதான் இருந்தன என்று கூறி விட்டு பின் ஏன் ராமாயணத்தில் ராமரின் ஆட்சியில் சீதை கடத்தப் படவில்லையா என்று கேள்வி எழுப்பி உள்ளார். சீதை கடத்தப்பட்ட போது ராமர் அரசர் அல்ல என்பதும், பரதனே அரசன் என்பதும் இவருக்கு தெரியாதா? ஆனால் சாதுர்யமாக பரதன் ரமாரின் பாதுகைகளை வைத்தே ஆட்சி செய்தான் என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம். அதற்கு முன் இன்னொன்றையும் தெரிந்து கொள்ளுங்கள், சீதை கடத்தப்பட்ட பஞ்சவதி பகுதி மகாராஷ்ட்ராவில், கோதாவரி ஆற்றின் அருகில் உள்ளது. ஆனால் ராமனும், பரதனும் ஆண்டதோ அயோத்தியா மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் மட்டுமே.
ஐயா கருணாநிதி அவர்களே, தங்களுக்கு தெரிந்த தமிழ் இலக்கியங்களில் இருந்து மட்டும் உதாரணங்களை கொடுங்கள். தெரியாத விஷயங்களில் மூக்கை நுழைத்து ஏன் ஒவ்வொரு முறையும் மூக்கறு படுகிறீர்கள்? இதில் ராமாயணம் படிக்காத தமிழர்களின் நிலைமைதான் கொடுமையிலும் கொடுமை. இவர் சொல்வதை உண்மை என்று நம்பி ஏமாந்து கை தட்டிக் கொண்டிருக்கின்றனர். ராமா, நீதான் இவர்களை திருத்த வேண்டும்.